திருத்தூதுப் பொழிவு
பன்னிரு திருத்தூதர்
(மாற் 3:13-19; லூக் 6:12-16)
1 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார்.
தீய ஆவிகளை ஓட்டவும்,
நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
2 அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர் பின்வருமாறு:
முதலாவது பேதுரு என்னும் சீமோன்,
அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா,
செபதேயுவின் மகன் யாக்கோபு,
அவருடைய சகோதரர் யோவான்,
3 பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா,
வரி தண்டினவராகிய மத்தேயு,
அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,
4 தீவிரவாதியாய் இருந்த சீமோன்,[1]
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.
திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்
(மாற் 6:7-13; லூக் 9:1-6)
5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது
அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது:
"பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம்.
சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.
6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான
இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
7 அப்படிச் செல்லும்போது
"விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்.
8 நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்;
இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்;
தொழுநோயாளரை நலமாக்குங்கள்;
பேய்களை ஓட்டுங்கள்;
கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.
9 பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும்
உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
10 பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ,
மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம்.
ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.
[2]
11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும்
அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள்.
அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.
12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.
13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால்,
நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்;
அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.
14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ,
நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால்
அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது
உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
[3]
15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக்
கிடைக்கும் தண்டனையை விட
அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
[4]
அனுப்பப்பட்டவர் அடையும் துன்பங்கள்
(மாற் 13 9:13; லூக் 21:12-19)
16 "இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல
நான் உங்களை அனுப்புகிறேன்.
எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும்
புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
[5]
17 எச்சரிக்கையாக இருங்கள்.
ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்.
தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.
18 என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும்
உங்களை இழுத்துச்செல்வார்கள்.
இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.
19 இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது,
'என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என
நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது
அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
20 ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல.
மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.
21 சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும்
தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள்.
பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து
அவர்களைக் கொல்வார்கள்.
[6]
22 என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர்.
இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.
[7]
23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால்
வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள்.
மானிட மகனின் வருகைக்குமுன்
நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும்
சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என
உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
24 சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல.
பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல.
[8]
25 சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்;
பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும்.
வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள்
வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா?
[9]
அஞ்சாதீர்கள்
(லூக் 12:2-7)
26 "எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை;
அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.
[10]
27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள்.
காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.
28 ஆன்மாவைக் கொல்ல இயலாமல்,
உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்.
ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.
29 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா?
எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.
30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.
31 சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்.
எனவே அஞ்சாதிருங்கள்.
[11]
மக்கள் முன்னிலையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்தல்
(லூக் 12:8-9)
32 "மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை
விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில்
நானும் ஏற்றுக்கொள்வேன்.
33 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும்
விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில்
நானும் மறுதலிப்பேன்.
[12]
பிளவு ஏற்படுதல்
(லூக் 12:51-53; மாற் 14:26-27)
34 "நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம்.
அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.
35 தந்தைக்கு எதிராக மகனையும்
தாய்க்கு எதிராக மகளையும்
மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.
36 ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.
[13]
37 என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர்
என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர்.
என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும்
என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
38 தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர்
என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
[14]
39 தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர்.
என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.
[15]
கைம்மாறு பெறுதல்
(மாற் 9:41)
40 "உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார்.
என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்.
[16]
41 இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர்
இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார்.
நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர்
நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.
42 இச்சிறியோருள் ஒருவருக்கு
அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும்
தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
- குறிப்புகள்
[1] 10:4 - மூல பாடத்தில் "கனனேயனான சீமோன்" என்றுள்ளது. "கனனேயன்" என்றால் அரமேயத்தில் "தீவிரவாதி" எனப் பொருள்படும்.
[2] 10:10 - 1 கொரி 9:14; 1 திமொ 5:18; 3 யோவா 8.
[3] 10:14 - திப 13:51.
[4] 10:15 - மத் 11:24.
[5] 10:16 - லூக் 10:3.
[6] 10:21 - மாற் 13:12; லூக் 21:16.
[7] 10:22 - மத் 24:9; மாற் 13:13; லூக் 21:17.
[8] 10:24 - லூக் 6:40; யோவா 13:16; 15:20.
[9] 10:25 - மத் 9:34; 12:24.
[10] 10:26 - மாற் 4:22; லூக் 8:17.
[11] 10:31 - 1 பேது 3:14.
[12] 10:33 - 2 திமொ 2:22; திவெ 3:5.
[13] 10:35,36 - மீக் 7:6.
[14] 10:38 - மத் 16:24; மாற் 8:34; லூக் 9:23.
[15] 10:39 - மத் 16:25; மாற் 8:35; லூக் 9:24; 17:33; யோவா 12:25.
[16] 10:40 - மாற் 9:37; லூக் 9:48; 10:16; யோவா 13:20.